கேரளத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். கேரள பல்கலைக்கழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 1) நடைபெற்ற தேசிய விளையாட்டு நாள் நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் முழுவதுமாகப் பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்எஃப்ஐ) போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், காவல் துறையினர் திடீரென தடியடி தாக்குதல் நடத்தியதாகவும், ஆண் காவலர்கள் போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், கேரளத்தின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு சங்க் பரிவார் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, மார்க்சிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி, அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தேசிய அளவில் தில்லி மாணவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்த காங்கிரஸ் கட்சி, கேரளத்தில் மாணவர்களுக்கு எதிராக பாசிச முறையைக் கையாள்கிறது. வந்தே மாதரம் பாடல் முழுவதுமாகப் பாடப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், கேரளத்தில் காங்கிரஸ் அரசு சங்க் பரிவாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் ஆதிக்கத்தை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, நீங்கள் உடனடியாகத் தலையிட்டு சங்க் பரிவாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறும், மாணவர்களுக்கு எதிரான காவல்துறையின் வன்முறைகளைக் கைவிடுமாறும் காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆக.30 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்ற கேரள அரசின் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் முழுவதுமாகப் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.போர் பாதிப்பு! சௌதிக்கு ரூ. 47,245 கோடிக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா! Pinarayi Vijayan has written a letter to Congress leader Mallikarjun Kharge regarding the police lathi-charge during SFI protest in Kerala.