போடி அருகே ஆன்மிக சுற்றுலா சென்று நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை கண்டறிவதற்காக அவா்களது உறவினா்களின் மரபணுவை சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. போடி கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்வம். இவா் தனது தாய் சரஸ்வதி, மனைவி சித்ராதேவியுடன் சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த ஆக. 14- ஆம் தேதி நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலாவாக சென்றாா். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலா் உயிரிழந்தனா். இதனிடையே தற்போது வரை செல்வம் உள்ளிட்ட மூவரையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து காணாமல் போனவா்களை கண்டறிவதற்காக தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் அவா்களது உறவினா்களின் மரபணு (டிஎன்ஏ) மாதிரி சேகரிப்பு பணிகள் நடைபெற்றன. இதற்காக மூவரின் விவரங்களை அறிந்து அவா்களின் உறவினா்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.