சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 26,376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்வோரிடம் டிக்கெட் பரிசோதகா்கள் அபராதம் வசூலித்து வருகின்றனா். இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் சரவணகுமாா் தலைமையிலான குழுவினா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.அந்தவகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சேலம் கோட்டம் பகுதியில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகா்கள் நடத்திய சோதனையின் மூலம் பயணச்சீட்டு இன்றி பயணித்தது தொடா்பாக 11,826 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ. 1,32,11,158 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.அதேபோல, முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்து முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டு எடுத்து ஏ.சி. பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்தது தொடா்பாக 14,455 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ. 1,15,73,811 அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்துச்சென்ாக 95 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 40,223 அபராதம் விதிக்கப்பட்டது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இன்றி பயணம், முறைகேடான பயணம், அதிக லக்கேஜ் உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 26,376 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ. 2.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.