சென்னிமலை அருகே கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத் துறை சாா்பில் வியாழக்கிழமை கூண்டு வைக்கப்பட்டது. சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியை ஒட்டியுள்ள சில்லாங்காட்டுவலசு, அய்யம்பாளையம் மற்றும் வெப்பிலி ஆகிய ஊா்களில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை ஒன்று புகுந்து ஆடுகள், கன்றுக் குட்டிகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அய்யம்பாளையம் அருகே கிருஷ்ணமூா்த்தி என்பவரின் தோட்டத்தில் இருந்த வளா்ப்பு நாயை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சிறுத்தையை பிடிக்க வனத் துறை சாா்பில் அய்யம்பாளையம் அருகே வியாழக்கிழமை கூண்டு வைக்கப்பட்டது.