300 திருக்குறள்களை ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் மொழி, இலக்கியத்தின் மீது இளம் வயதிலேயே பற்றுணர்வை வளர்க்கும் நோக்கில் 300 திருக்குறள்களை மனனம் செய்து ஒப்பிக்கும் 500 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத் தொகையை அரசு வழங்கும். தமிழ் மொழித் தியாகிகளின் ஒப்பற்ற பங்களிப்பை நினைவுகூரும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளை அரசு தொடர்ந்து நடத்தும்.காயிதே மில்லத் வரலாற்றுப் பெருமையைப் போற்றும் வகையிலும், தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றைக் கொண்டாடும் வகையிலும் ஒரு புதிய விருது ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளன்று காயிதே மில்லத் நினைவாக வழங்கப்படும். தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழ்ப் பெருந்திரள் மொழி மாதிரி (எல்எல்எம்) உருவாக்குதல், அரசின் அதிகாரபூர்வ தொடர்புகளை செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழித் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு செயல்படுத்துதல் மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழுக்கென பிரத்யேகமான செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்குதல் ஆகியவை முன்னெடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் தலங்கள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.