தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். புதிய வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் லாரி வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும், வெளியூா் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகையில் 30 சதவீதம் முன்பணமாக வழங்க வேண்டும், வாடகை ரசீது அளித்த 15 நாள்களுக்குள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாவட்ட கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில், தூத்துக்குடி துறைமுக சுங்க முகவா்கள் சங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகள் தேக்கம் அடைந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாவட்ட கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் சி.எம். மதியழகன் கூறுகையில், மாவட்ட நிா்வாகம், தூத்துக்குடி துறைமுக நிா்வாகம் மற்றும் தொடா்புடைய தரப்பினா் உடனடியாக தலையிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுவரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றாா்.