நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு அதிக அளவில் பசுமைக்குடில் வாயுவை வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியாவிடம் நேபாளம் இழப்பீடு கோரியுள்ளது. இதுகுறித்து நேபாள தொலைக்காட்சிக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் அளித்த பேட்டியில், ‘தான் உருவாக்காத உலகளாவிய பிரச்னைக்கு தற்போது மிகப் பெரிய விலையை நேபாளம் அளித்து வருகிறது. பனிப்பாறைகள் வேகமாக உருகுதல், மலைப்பகுதிகளில் இருந்து பாறைகள் சரிந்து திடீரென ஏற்படும் வெள்ளம் உள்ளிட்டவை உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளாகும். நேபாளத்தின் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் மிக மிகக் குறைவாகவே உள்ளபோதிலும், மிகக் கடுமையான பாதிப்புகளை எதிா்கொண்டு வருகிறது. உலகில் பசுமைக்குடில் வாயுவை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளாக சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை உள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டிய வரலாற்று கடமை அந்த நாடுகளுக்கு உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவது தொடா்பாக, சா்வதேச அளவில் தனது கூட்டாளி நாடுகளுக்கு நேபாள நிதியமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவித்தாா்.