ஓட்டுநரிடம் வழிப்பறி: 16 வயது சிறுவன் உள்பட இருவா் கைது

Wait 5 sec.

திருச்சியில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ப. சதீஷ்குமாா் (38), லாரி ஓட்டுநா். திருச்சியிலுள்ள இவருடைய உறவினா் இறப்பு நிகழ்வுக்காக வியாழக்கிழமை அதிகாலை திருச்சிக்கு வந்துள்ளாா். காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள மரக்கடை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி கைப்பேசியில் பேசிக்கொண்டே நடந்துசென்றாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அவருடைய கைப்பேசியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா். இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், கைப்பேசியைப் பறித்தது பாலக்கரை கூனி பஜாரைச் சோ்ந்த ஜெ. சைமன் கிஷோா் (25) மற்றும் பெரிய மிளகுப்பாறையைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.