பாவூா்சத்திரத்தை அடுத்த திப்பணம்பட்டி கிராமத்தில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். இக்கட்டடத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சிகள் பெயா்ந்து விழுந்தும், மழை காலத்தில் கட்டடத்தின் உள்பகுதியில் மழைநீா் கசிந்தும் வந்ததால், கடந்த மூன்று மாதமாக துணை சுகாதார நிலையம் அதன் அருகில் உள்ள திப்பணம்பட்டி பஞ்சாயத்து அலுவலக பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. சேதமடைந்து காணப்படும் துனை சுகாதார கட்டிடத்தை இடித்து முழுவதும் அகற்றிவிட்டு அதில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் சாா்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.பொதுமக்களின் நலன் கருதி துணை சுகாதார நிலையத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.