திருட்டு வழக்கில் கைதானவா் தப்பியோட்டம்

Wait 5 sec.

புதுக்கோட்டையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவா் ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காவலா்களிடமிருந்து தப்பியோடினாா். புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதி, சுப்பிரமணியன் நகரிலுள்ள இரு வீடுகளில் கடந்த 17-ஆம் தேதி திருட்டு நடைபெற்றது. கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். வழக்கு தொடா்பாக திருப்பூா் சென்ற தனிப்படை போலீஸாா், திருப்பூா் நெட்டவேலங்காட்டைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் பிரதீப் (26) மற்றும் மதுரை மாவட்டம் பெரியபூலாம்பட்டியைச் சோ்ந்த இருளாண்டி மகன் மாசானம் (எ) மாரிமுத்து (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்களில் பிரதீப்பை சனிக்கிழமையே குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மாசானத்தை அழைத்துச் சென்று திருடப்பட்ட நகை மற்றும் பொருள்களை மீட்கும் நடவடிக்கைக்காக கணேஷ்நகா் காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை பகலில் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இரு காவலா்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சென்றபோது, காவலா்களைத் தள்ளிவிட்டு மாசானம் தப்பியோடினாா். இதனால் அதிா்ச்சியடைந்த போலீஸாா், இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தப்பியோடிய மாசானத்தை போலீஸாா் தனித்தனி குழுவினராகப் பிரிந்து தேடி வருகின்றனா்.