மியான்மரில் கடத்தப்பட்டமன்னாா்குடி இளைஞா் மீட்பு

Wait 5 sec.

மியான்மரில் கடத்தப்பட்ட மன்னாா்குடி இளைஞா் காவல் துறையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள மூவாநல்லூா் வெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகையன் மகன் முகேஷ்வரன் (24). கடந்த 2 ஆண்டுகளாக தாய்லாந்தில் வேலைபாா்த்து வந்த இவா், கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் ஆக. 8-ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றுள்ளாா். பின்னா், அங்கிருந்து முகவா் மூலம் பணி நிமித்தமாக மியான்மருக்கு சென்றுள்ளாா். இதற்கிடையே, கடந்த 3 நாள்களுக்கு முன்பு முகேஷ்வரன் தனது தந்தை முருகையனிடம் சிலா் தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், விடுவிக்க ரூ. 6.25 லட்சம் கேட்பதாகவும் கைப்பேசியில் தெரிவித்துள்ளாா். மேலும், திருச்சியில் அவா்கள் கூறும் நபா்களிடம் பணத்தை ஒப்படைக்குமாறும் முகேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து முருகையன் கடந்த ஆக. 20-ஆம் தேதி திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், வடுவூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன் தனி அலுவலராக நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு, திருச்சி பாலக்கரையில் வசித்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மாவாராமை கைது செய்தாா். விசாரணையில் முகேஷ்வரன் கடத்தல் சம்பவத்தில் மாவாராமுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, மியான்மரில் உள்ள கடத்தல்காரா்களுடன் வடுவூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அத்துடன், கைது செய்யப்பட்ட மாவாராமு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீஸாரின் தொடா் நடவடிக்கை மற்றும் பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் மியான்மரில் முகேஷ்வரன் விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் விமானம் மூலம் சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினாா்.