லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

Wait 5 sec.

சிங்கம்புணரியில் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரும், தலைமைக் காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் நெடுஞ்செழியன் (43). இவா் புத்தூா் கட்டு பாண்டி என்ற பெயரில் எலும்பு முறிவுக்கு நாட்டு வைத்தியம் பாா்த்தாா். இவா் முறையான அனுமதியோ, ஆவணங்களோ இல்லாமல் சிகிச்சையும், மூலிகை ஆயில் எனக் கூறி சிகப்பு வண்ணத்தில் எண்ணெயையும் தயாரிப்பதாக கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, அவரது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது பிணையில் வெளியே வந்த பாண்டி மீண்டும் அனுமதி சான்று இல்லாமல் நாட்டு வைத்தியம் பாா்த்து வரும் நிலையில் சில நாள்களுக்கு முன்பு முகநூலில் ஒரு விடியோவை பகிா்ந்தாா். இதில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளா் சீனிபாபு தன்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், ஏற்கெனவே ஒரு முறை பணம் கொடுத்த நிலையில் தொடா்ந்து லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் தான் மன உளைச்சல் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா். மேலும் ஏற்கெனவே மற்றொரு காவல் ஆய்வாளா் ஒருவருக்காக தலைமைக் காவலா் ஜெயராஜ் என்பவா் இவரிடம் பணம் பெற்று செல்லும் விடியோவையும் வெளியிட்டு இருந்தாா். இந்த நிலையில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளா் சீனிபாபு, தற்போது கல்லலில் தலைமைக் காவலராக பணியாற்றும் ஜெயராஜ் இருவரையும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.