நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து தில்லி சென்றுள்ள அமைச்சர்கள், மத்திய வெளியுறவுத் துறை செயலாளரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 106 தமிழர்கள் சிக்கியுள்ளதையடுத்து மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முடிவெடுக்கப்பட்டது. அதேபோல ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகிய 4 அமைச்சர்கள் தில்லி சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்குமாறும் முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர்கள் 4 பேரும் நேற்று இரவே தில்லி சென்ற நிலையில் அவர்கள் இன்று தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தில்லி பிரதிநிதியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தில்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துப் பேசியுள்ளனர். நேபாளத்தில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான மீட்புப் பணிகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.நேபாளத்திற்குச் சென்ற 106 தமிழர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 85 பேரின் நிலவரம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Tamils in Nepal: TN Ministers meet the Foreign Secretary in Delhiஐயுஎம்எல் அலுவலகத்துக்கு வந்த ஒரே முதல்வர் விஜய்தான்! அமைச்சர் ஷாஜகான்