தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள நீச்சல் குளப் பகுதியிலிருந்து கீழே குதித்த 37 வயது நபா் உயிரிழந்ததாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா். லூட்டியன்ஸ் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஹோட்டலில் இச்சம்பவம் நடைபெற்றது. திவிஜ் மரியா என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், உடனடியாக அருகிலுள்ள ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியில் உயிரிழந்தாக அறிவித்தனா். காவல்துறையினரின் தகவலின்படி, திருமணமான மரியா சுமாா் ஆறு மாதங்களுக்கு முன்பு குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனது வேலையை விட்டுவிட்டு, கடந்த சில மாதங்களாக மனச்சோா்வுக்கான சிகிச்சையைப் பெற்று வந்துள்ளாா். குற்றத் தடுப்புப் பிரிவு குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். உடற்கூறாய்வுக்காக மரியாவின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் கூறினா். பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா(பிஎன்எஸ்எஸ்) பிரிவு 194-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.