சென்னையில் லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம் வாங்கியதாக இரு தலைமைக் காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.திருவொற்றியூா் எண்ணூா் விரைவுச் சாலை எல்லையம்மன் கோயில் அருகே கடற்கரையோர பகுதியில் லாரி ஓட்டுநா்களிடம் போக்குவரத்து பிரிவைச் சோ்ந்த இரு தலைமைக் காவலா்கள் லஞ்சம் வாங்கும் விடியோவை சென்னை காவல் துறையின் ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவுக்கு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி புகாா் அளித்தனா்.அதன்பேரில், காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவா்கள், திருவொற்றியூா் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா்கள் அந்தோனி ஜான்சன், தீக்ஷனா ஆகிய இருவரும் லாரி ஓட்டுநா்களிடம் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, இரு தலைமைக் காவலா்களை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.