சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி டி.சி. வாங்கிக் கொள்ளுமாறு ஆசிரியர்கள் எச்சரித்ததாகக் கூறப்படும் நிலையில், பிளஸ்-2 மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சங்ககிரி தாலுகா கோனேரிப்பட்டி அக்ரஹாரம் வட்ராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் ராமகிருஷ்ணன் (18). இவர் செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 22-ம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில், ராமகிருஷ்ணனின் வகுப்பு ஆசிரியர் உமாநாத், அவரது பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தலைமை ஆசிரியர் அறைக்கு வருமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சீனு, ரவிசங்கர் உள்ளிட்டோர், ராமகிருஷ்ணன் பள்ளியில் செல்போன் பயன்படுத்தி புகைப்படம் எடுத்ததாகக் கூறி, அவரது செல்போனில் இருந்த புகைப்படங்களைப் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் செல்போன் பயன்படுத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவதாகவும் ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணனுக்கு டி.சி. வாங்கிக் கொள்ளுமாறு கூறியதாகவும், பெற்றோர் தங்கள் மகனை மன்னித்து, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக கையெழுத்து பெற்றுக் கொண்டு, திங்கள்கிழமை பள்ளிக்கு வந்து டி.சி. பெற்றுச் செல்லுமாறு கூறி அனுப்பியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் ராமகிருஷ்ணன் தனது பழைய வீட்டில் இருப்பதாக நினைத்து பெற்றோர் அங்குச் சென்றுள்ளனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வீட்டின் நடுப்பகுதியில் ராமகிருஷ்ணன் கயிற்றால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கயிற்றை அறுத்து அவரை கீழே இறக்கியபோது, அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ராமகிருஷ்ணனின் பெற்றோர் தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மாணவரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.