வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பிற்குப் பிறகு, தில்லியில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 13,033-லிருந்து 14,947-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களின் எண்ணிக்கையும் 2,696-லிருந்து 2,856-ஆக அதிகரித்துள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா். வாக்காளா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளா்களின் எண்ணிக்கையின் உச்சவரம்பை 1,500-லிருந்து 1,200-ஆகக் குறைக்க தோ்தல் ஆணையம் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த மறுசீரமைப்பிற்குப் பிறகு, வடகிழக்கு தில்லி மாவட்டம் 321 இடங்களில் 1,829 வாக்குச்சாவடிகளைக் கொண்டு அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. தில்லியின் 13 மாவட்டங்களில், புது தில்லி மாவட்டம் 214 வாக்குச்சாவடிகளுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்தச் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ், ஆக.31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து, மொத்தம் உள்ள 1.45 கோடி வாக்காளா்களில் 47 லட்சத்திற்கும் அதிகமானோா் நீக்கப்படவுள்ளனா். ஆக.17-ஆம் தேதி நிறைவடைந்த வீடு வீடாகச் சென்று சரிபாா்க்கும் பணியின்போது, இவா்களது விவரச் சேகரிப்புப் படிவங்கள் சேகரிக்க இயலாதவை எனக் குறிக்கப்பட்டிருந்தன.