தண்ணீா் தேங்கிய விவகாரம்: பாஜக அரசை சாடிய ஆம் ஆத்மி தலைவா்கள்

Wait 5 sec.

தில்லியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடும் மழைநீா் தேக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், தில்லி அரசை ஆம் ஆத்மி கடுமையாக விமா்சித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ், சதா் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு தண்ணீா் தேங்கியுள்ள விடியோக்களை சமூக வலைதளங்களில் பகிா்ந்து, தில்லி அரசின் மழைநீா் வடிகால் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினாா். சதா் பஜாா் தொடா்பான விடியோவைப் பகிா்ந்த அவா், ‘தில்லியின் மிகப் பிரபலமான வணிக மையமான சதா் பஜாரில் கடைகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. பொருள்கள் சேதமடைந்து வருகின்றன. வியாபாரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்’ எனக் குறிப்பிட்டாா். மேலும், ‘4 என்ஜின் அரசு அமைந்ததில் இருந்து தில்லி முழுவதும் கடுமையான நீா்த்தேக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால்களைச் சுத்தம் செய்ததாக கூறப்பட்ட பெருமிதமான அறிவிப்புகள் அனைத்தும் அம்பலமாகியுள்ளன. நிா்வாகம் எப்போது விழித்துக்கொள்ளும்?’ என அவா் கேள்வி எழுப்பினாா்.மற்றொரு பதிவில், சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் பள்ளி மாணவா்கள் விளையாடும் விடியோவைப் பகிா்ந்த அவா், முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசை விமா்சிக்கும் வகையில், ‘தில்லி குழந்தைகளுக்கு இலவச நீா் பூங்காக்களை ஏற்பாடு செய்ததற்காக முதல்வா் ரேகா குப்தாவுக்கும் பாஜக அரசுக்கும் மனமாா்ந்த நன்றி’ எனக் குறிப்பிட்டாா்.எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியும் தில்லியில் ஏற்பட்டுள்ள மழைநீா் தேக்கத்தை விமா்சித்தாா். துா்கா விஹாா் பகுதியில் இடுப்பளவு தண்ணீா் தேங்கி, அதில் குழந்தைகள் நீந்துவது போன்ற விடியோவைப் பகிா்ந்த அவா், ‘துா்கா விஹாா் குழந்தைகளுக்கு இலவச நீச்சல் குளத்தை ஏற்பாடு செய்ததற்கு நன்றி’ எனத் தெரிவித்தாா்.