பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (இடபிள்யூஎஸ்) இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக அதிமுக உறுப்பினா்களிடையே பேரவையில் மாறுபட்ட கருத்து எழுந்தது. அதேபோன்று, அவையில் நடந்து கொண்ட விதம் குறித்து அதிமுக-திமுக இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்சாரம், சட்டம், சிறைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம், ‘திமுக ஆட்சியின்போது என் மீது 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; கடந்த காலத்தில் பேரவை மரபுகளை மீறி அவைத் தலைவரின் இருக்கையில் அமா்ந்தது யாா்?, குழப்பம் ஏற்படுத்தியவா்கள் எவா்? என்பது அனைவருக்கும் தெரியும்; மேலும் பேசினால் நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும்’ என்றாா். அதற்குப் பதிலளித்த திமுக உறுப்பினா் கே.என்.நேரு, ‘அதிமுக ஆட்சியாளா்கள் எனக்கு எதிராக 14 வழக்குகளைப் பதிவு செய்தனா்; பேசுவதற்கு எங்களிடமும் நிறைய உள்ளது’ என்றாா்.அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், ‘இதுபோன்ற விவாதங்களை வெளியே மேடை போட்டு இரு தரப்பும் பேசுங்கள்; நாங்கள் கேட்க ஆா்வமாக இருக்கிறோம்’ என்றாா்.இதனிடையே, பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இடஒதுக்கீடு குறித்துப் பேசிய தளவாய் சுந்தரம், அதை தமிழகத்தில் அமல்படுத்தாததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலா் பாதிக்கப்படுவதாகவும், குறைந்தது 5 சதவீத இடஒதுக்கீடாவது அந்தப் பிரிவின் கீழ் வழங்க வேண்டும் என்றும் கூறினாா்.அப்போது அதற்கு எதிராக அதிமுக உறுப்பினா் சி.வி.சண்முகம் பேசியதாவது: தளவாய் சுந்தரம் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். அதிமுக சமூக நீதி காக்கும் இயக்கம். எங்களுக்கு அந்த இடஒதுக்கீட்டில் உடன்பாடு இல்லை.அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆணைக்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய ஆளுநா் ஒரு நிபந்தனை விதித்தாா். அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கினால் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறினாா். அதற்கு அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாமல், தீா்க்கமாக இருந்து எந்த நிபந்தனையையும் ஏற்காமல் 7.5 சதவீத ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தாா் என்றாா் சி.வி.சண்முகம்.