ஈரானுக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரவுள்ள பொருளாதாரப் போரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நட்பு நாடுகளை வலியுறுத்தி வருகிறார். அதேநேரம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் ஆறு மாத காலத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் உயர்நிலை தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சென் ரெசாய் அரசுத் தொலைக்காட்சியில் பேசுயபோது, “அமெரிக்காவின் பொருளதாரப் போரில் இணைய வேண்டாம் என அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அறிவிக்கிறோம். ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு நாடும் எதிரியாகவே கருதப்படும். சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவிடமிருந்து விலக மறுத்தால் ஈரான் அவர்களை மோசமாக நடத்தும். நாங்கள் இதுவரை அமெரிக்காவின் எந்தவொரு பொருளாதார கட்டுமானங்களையும் தாக்கவில்லை. இந்தப் போரில் ஈரான் கையாளுவதற்கு இன்னும் பல உத்திகள் உள்ளன. இதுவரை நாங்கள் ராணுவத் தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். ஆனால், அவர்கள் எங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்க விரும்பினால், ஈரானைச் சுற்றியும் மற்றும் பிற இடங்களிலும் அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் பொருளாதார நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் அவற்றின் மீது தாக்குதல் நடத்துவோம். எங்களுடைய எதிர்வினை ஒரு நிலநடுக்கத்தைப் போன்று இருக்கும்” என்று அவர் எச்சரிக்கும் விதத்தில் பேசினார். ஈரானின் முக்கிய நட்பு நாடான சீனா உள்பட பல நாடுகளையும் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் இணையுமாறு அமெரிக்கா அழைத்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் தடையால் இந்த மோதலைத் தீர்க்க முடியாது என சீனா விமர்சித்துள்ளது. ஈரானின் முக்கிய வர்த்தக நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகம், மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுடன் அனைத்து வர்த்தக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை நிறுத்தி வைப்பதாக சில நாள்களுக்கு முன் அறிவித்தது. Iran has stated that all countries participating in the economic war the US is set to launch against it will be considered enemies.அமெரிக்கா உடனான போரில் ஈரான் வென்றதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது: ஈரான் அதிபர்