டாக்ஸிக் திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வில் ஸ்பீக்கர் சரிந்து விபத்து ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ஹூமா குரேஷி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இதில் யஷ், கியாரா அத்வானி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் யஷ் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது, நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜே ஸ்பீக்கரை தாங்கும் கட்டமைப்பின் மீது ஏறினர். அப்போது, ஸ்பீக்கருடன் ஒட்டுமொத்த கட்டுமானமும் கீழே சரிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர். இதில், மாணவர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்நிகழ்வை நடத்திய கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. ஸ்பீக்கர் சரிந்து விழுவதைக் கவனித்த யஷ், தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கவனிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்களையும் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டார். அவர் பேசுகையில், “அங்கே அனைத்தும் சரியாக இருக்கிறதா? கவனமாக இருங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” என மைக்கில் கேட்டார். பின்னர், மற்றொரு ஸ்பீக்கர் கட்டுமானத்தின் மேல் ஏறி நின்ற ரசிகர்களை கீழிறங்குமாறு அவர் வலியுறுத்தினார். Four people were injured in an accident where a speaker collapsed at the pre-release event of the movie Toxic.இருமுடி பார்த்து ஆண்களும் கண்ணீர் விடுகின்றனர்: ரவி தேஜா