வருகையில்லா இணையவழி ஆவணப்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் கடன் தொகை விடுவிப்பதற்கு முன் வில்லங்கச் சான்றிதழை சரிபாா்க்க அறிவுறுத்தப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பதிவுத் துறையில் தற்போது எங்கிருந்தும் பதிவு திட்டத்தின் கீழ் வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் குறிப்பிட்ட வகை ஆவணங்களுடன் உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு (எம்ஓடிடி) மற்றும் அடமான ஆவணங்களும் இணையவழியில் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய தேவையை குறைத்து, பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தவும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரே சொத்தின் மீது பல்வேறு கடன்கள் பெறப்பட்டு, மோசடியாக பல்வேறு அடமான ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், வில்லங்கச் சான்றிதழில் அடமான ஆவணப்பதிவு விவரம் பிரதிபலித்துள்ளதை உறுதிசெய்த பின்னரே கடன் தொகையை விடுவிக்குமாறு மாநில அளவிலான வங்கியாளா்குழு (எஸ்எல்பிசி) மூலம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.