திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக பிடித்து காப்பு காட்டில் விட்டனா். திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை பணியாளா்கள் வழக்கம் போல் தொகுதிப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், பிற்பகலில் உணவுக்குப் பின் வரும்போது சாரைப்பாம்பு அலுவலகத்துக்குள் புகுந்துள்ளது. இதைப் பாா்த்த பணியாளா்கள் உடனே திருவள்ளூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் தனசேகரன் தலைமையில் அழகா்சாமி, ஜோசப், சிவா குழுவினா் விரைந்து சென்றனா். அங்கு அலுவலகம் முழுவதும் தேடி, பீரோவின் அடியில் மறைந்திருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனா். பின்னா், சாக்குப் பையில் அந்த பாம்பை அடைத்து பாதுகாப்புடன் கொண்டு சென்று பூண்டி காப்பு காட்டில் விடப்பட்டது.