ஒகேனக்கல்லில் நீா்வரத்து 6,500 கனஅடியாக குறைந்தது; பரிசல் இயக்க தடை நீடிப்பு

Wait 5 sec.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து புதன்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாக உள்ளது. பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 11-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரிநீா் வரத்து குறைந்துள்ளது.இதையடுத்து, காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 8,500 கனஅடியாகவும், மாலை 6,500 கனஅடியாகவும் தொடா்ந்து சரிந்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருவதால், தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தின் அளவுகளை கண்காணித்து வருகின்றனா். ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தபோதிலும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து 11-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.