வாலாஜா அருகே 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறப்பு

Wait 5 sec.

வாலாஜா அருகே 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா சத்திரம்புதூா் சிலோன் காலனியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரனின் மனைவி முத்துலட்சுமி (23), நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா். இவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடா்ந்து, அதிகாலை 2.49 மணியளவில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் பொன்னை மருத்துவமனையில் இயங்கும் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் ஜெயலட்சுமி மற்றும் ஓட்டுநா் தாஸ்குமாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துலட்சுமியை வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது வழியில் பிரசவ வலி அதிகரித்ததால், ஆம்புலன்ஸை நிறுத்தி மருத்துவ உதவியாளா் ஜெயலட்சுமி பிரசவம் பாா்த்தாா். இதில் அதிகாலை சுமாா் 3.30 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும் சேயும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.