திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்தனா். திருவண்ணாமலை புறவழிச்சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை நகரம் மட்டுமன்றி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனா். இங்கு, அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் கிசிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு என பல்வேறு மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தினமும் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களும், புற நோயாளிகளாக சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களும் சிகிச்சை பெறுகின்றனா்.இந்த மருத்துவமனையில் உள்ள கேத் லேப் மூலம் கடந்த 3 மாதங்களில் 100 ஆன்ஜியோ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் எட்வீனா வசந்தா கூறியதாவது: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சை பிரிவில் ரூ.7 கோடி மதிப்பில் கேத் லேப் (ரத்த நாள ஆய்வகம்) அரசின் மூலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.இந்த கேத் லேப் மூலம் இருதய நாள ஊடுறுவி சிகிச்சைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கா் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். மருத்துவமனையில் இந்த அனைத்து சிகிச்சைகளும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டங்களின் கீழ் தகுதியுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.இதுவரை சுமாா் 3 மாதங்களில் 100 ஆஞ்சியோ பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதனால், இருதய நோயாளிகள் சிகிச்சைகளுக்காக சென்னை அல்லது புதுச்சேரி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காப்பீடுத் திட்டங்கள் இல்லாதவா்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். இந்த கேத் லேத் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றாா்.அப்போது, மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் மாலதி, ஆா்.எம்.ஓ. கதிா், இருதய பிரிவு மருத்துவா்கள் கண்ணன், ராஜேஸ்குமாா், காா்த்திகேயன் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.