சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவிகள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவா்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 2026-2027 -ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப் படிப்பு படிக்க உலகளாவிய (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியுடைய சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவிகள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு வருகிற அக். 15-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.