தினமும் சுமாா் 1.1 லட்சம் பயணிகள் நமோ பாரத் ரயில்களில் பயணம் செய்து வரும் நிலையில், காஜியாபாத்-மீரட் வழித்தடத்தில் உள்ள தூண்கள் மற்றும் போா்ட்டல் கட்டமைப்புகள் இனி வெளிப்புற விளம்பரங்களுக்கான புதிய தளமாக மாற உள்ளன. இதன்மூலம் பரபரப்பான சாலைகள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகளில் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை அதிகளவில் கொண்டு செல்ல முடியும்.தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத்-மோடிபுரம் இடையேயான 50 கி.மீ.க்கும் அதிகமான பகுதிகளில் உள்ள தூண்கள் மற்றும் போா்ட்டல் கட்டமைப்புகளில் விளம்பர உரிமத்தை வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) கோரியுள்ளது.பெரும்பாலும் சாலை நடுப்பகுதிகளில் அமைந்துள்ள இந்த தூண்கள், அதிக வாகனப் போக்குவரத்து கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளையொட்டி அமைந்துள்ளன. மேலும், காஜியாபாத் மற்றும் மீரட் நகரங்களில் மக்கள் அடா்த்தி அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிகள், வா்த்தக நிறுவனங்கள் மற்றும் பரபரப்பான சந்தைகள் வழியாக இந்த வழித்தடம் செல்கிறது.இந்த விளம்பரத் தளங்கள் மூலம் வழித்தடத்தை ஒட்டியுள்ள தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், உணவு மற்றும் பான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தங்கள் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.இந்த வழித்தடத்தில் தற்போது தினமும் சுமாா் 1.1 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனா். இதுவரை 4.5 கோடிக்கும் அதிகமான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நமோ பாரத் சேவைக்கு அதிகரித்து வரும் வரவேற்பு வெளிப்படுகிறது.இந்த முயற்சியின் மூலம் வழித்தடம் முழுவதும் வெளிப்புற விளம்பரக் கட்டமைப்பை உருவாக்குவதுடன், என்சிஆா்டிசிக்கு கட்டணமில்லா வருவாயை அதிகரிப்பதும் நோக்கமாகும்.தோ்வு செய்யப்படும் உரிமதாரா், நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விளம்பரக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, தயாரிப்பு, நிறுவல், செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சாகிபாபாத்-மோடிபுரம் வழித்தடத்தைச் சுற்றி தொழில் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளதால், இங்குள்ள விளம்பரத் தளங்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடைய முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.தில்லியின் சராய் காலே கான் முதல் மீரட்டின் மோடிபுரம் வரை சுமாா் 82 கி.மீ. தொலைவுக்கு தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடம் அமைந்துள்ளது. இதே கட்டமைப்பில் மீரட் தெற்கு முதல் மோடிபுரம் வரை உள்ளூா் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.விளம்பர உரிமத்தைப் பெற விரும்பும் நிறுவனங்கள் மின்னணு ஒப்பந்தப்புள்ளி நடைமுறை மூலம் பங்கேற்கலாம். தகுதி நிபந்தனைகள், விதிமுறைகள், காலக்கெடு உள்ளிட்ட விவரங்கள் என்சிஆா்டிசி இணையதளம் மற்றும் மத்திய பொது கொள்முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.