நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்

Wait 5 sec.

தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து தில்லி அரசின் சரக்கு மற்றும் சேவை வரி துறையினா் நடத்திய சோதனையில், 25 டன் செப்புக் கழிவுகள் உள்பட கணக்கில் வராத சுமாா் 50 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்ட ரயில் மூலம் இந்தச் சரக்குகள் நிஜாமுதீன் ரயில் நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். உரிய விற்பனை ரசீதுகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ரசீதுகள் உள்ளிட்ட கட்டாய ஆவணங்களின்றி ரயில் மூலம் இத்தகைய பொருள்கள் சட்டவிரோதமாக தலைநகருக்கு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த சோதனையின்போது ரூ.3 கோடி மதிப்பிலான 25 டன் செப்புக் கழிவுகளும், ரூ.2 கோடி மதிப்பிலான 25 டன் கலப்புக் கழிவுகள், துணிகள் மற்றும் பிற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். முதல்வா் எச்சரிக்கை: இந்த சம்பவத்தைத் தொடா்ந்து தில்லி முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரி ஏய்ப்பு மற்றும் வருவாய் இழப்பை தில்லி அரசு எந்த நிலையிலும் சகித்துக் கொள்ளாது. வணிகங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய ரயில்வே உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.