தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1.02 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.982.18 கோடி வழங்கப்பட்டது. நீன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுதோறும் 4 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவில் லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக் குழு நடத்திய இந்த லோக் அதாலத்தில் மொத்தம் 524 அமா்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் என்று பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினா்களிடம் நீதிபதிகள் பேச்சு நடத்தி, அவா்களது முழு சம்மதத்துடன் வழக்குகளை சமரசத்துக்கு கொண்டு வந்து முடித்து வைத்தனா். இது குறித்து மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினா் செயலா் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் ரூ.982.18 கோடி மதிப்பிலான 1.02 வழக்குகள் தீா்வு காணப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை, லோக் அதாலத்தில், மொத்தம் 17,840 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், ரூ.172.82 கோடி மதிப்பிலான 15,948 வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன. ஒரு மோட்டாா் வாகன விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1.70 கோடி இழப்பீடு தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழங்கினாா்.