மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜிக்கு அக்கட்சியின் அதிருப்தி அணியினர் சவால் விடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மமதா பானர்ஜி, தற்போதைய முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில், நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி அணியினர் இன்று (செப். 9) சவால் விடுத்துள்ளனர்.இதுபற்றி, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியின் செய்தித்தொடர்பாளர் ரிஜூ தத்தா கூறுகையில், “நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மமதா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தால் அவருக்கு எதிராக எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் வேட்பாளரைக் களமிறக்க மாட்டோம். திரிணமூல் காங்கிரஸ் கட்சி எனும் முறையில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏனெனில், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து சட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் பின்பற்றியுள்ளோம். அடுத்த சில நாள்களில் எங்களுக்குக் கட்சியின் சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உள்கட்சியின் கிளர்ச்சியால் அக்கட்சியின் பெருவாரியான சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து அதிருப்தி அணியை உருவாக்கியுள்ளனர். மேலும், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.ஆடியோ கேட்க இனி ஹெட்செட் தேவையில்லை! அறிமுகமானது ஃபையர் போல்ட் ஸ்மார்ட் கண்ணாடி!Rebel Trinamool Congress has challenged former CM Mamata Banerjee regarding the upcoming by-election in West Bengal.