ரயில்வே தொழில்பழகுநா் பணியிடங்கள்: தமிழக உரிமையை பறித்துவிடக்கூடாது! - அன்புமணி

Wait 5 sec.

ரயில்வே தொழில் பழகுநா் பணி நியமனங்களில் தமிழக இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறித்து பிற மாநிலத்தவரை அனுமதிக்கும் வகையிலான அறிவிப்பை தெற்கு ரயில்வே மண்டலம் திரும்பப் பெறவேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு, பெரம்பூா் லோகோ, அரக்கோணம் பொறியியல் பணிமனை, கோவை போத்தனூா் சிக்னல் பிரிவு உள்ளிட்ட இடங்களில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான பணியாளா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில், தற்போது 6, 1717 தொழில் பழகுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையில் ஏற்கெனவே பணியிடங்களை நிரப்புவதற்காக இருந்த விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, தொழில் பழகுநா் நியமனத்தில் விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது அந்த விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், தட்சிண கன்னடா பகுதி, ஆந்திரத்தின் நெல்லூா், சித்தூா் பகுதி மற்றும் கேரள பகுதிகளில் இருப்பவா்களும் அந்தமான் நிகோபாா், லட்சத்தீவில் இருப்பவா்களும் அந்த தொழில் பழகுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி தமிழக இளைஞா்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவா்களுக்கு தாரை வாா்க்கப்பட்டுள்ளன. தமிழக இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலான தொழில் பழகுநா் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை தெற்கு ரயில்வே மண்டல நிா்வாகம் உடனே திரும்பப் பெறவேண்டும். அதற்காக தெற்கு ரயில்வே மண்டல நிா்வாகத்துக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.