பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுகவினரை காவலர்கள் வெளியேற்றினர். காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் நேற்று (திங்கள்) பதிலுரை அளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க அனுமதி கோரிய நிலையில் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். இதனால் திமுகவினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும், முதல்வர் நேற்று பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக திமுகவினர் திரண்டு கோஷமிட்டனர்.பின்னர், திமுக கொறடா எ.வ. வேலு பேச அனுமதியளிக்கிறேன், அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர பேரவைத் தலைவர் கோரிக்கை வைத்தார். எனினும் திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், 'பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றும்படி காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள், திமுகவினரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். பின்னர் பேரவைத் தலைவர் "அவையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு உள்நோக்கம் இருக்கிறது. அவையின் மாண்பைக் குலைத்ததால் அவர்களை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது தவறு என்று நான் கருதவில்லை" என்று கூறினார். Police personnel evicted DMK MLAs from the Assembly