மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 1,250 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் 1,150 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஜெகத்ஹரி உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.சஞ்சய் (22) மற்றும் காமராஜபுரத்தைச் சோ்ந்த கே.ஸ்ரீதா் (24) ஆகிய இருவரும் வெளிமாநிலங்களுக்குச் சென்று மொத்தமாக போதை மாத்திரைகளை கொள்முதல் செய்து, அவற்றை கோவை மாநகா் முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இந்தத் தகவலின் அடிப்படையில், இருவரையும் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அவா்கள் புதிய சரக்குகளை வாங்குவதற்காக மகாராஷ்டிர மாநிலம், புணேவுக்குச் சென்றதையும், அவா்கள் மீண்டும் ரயில் மூலம் கோவைக்கு வருவதையும் போலீஸாா் அறிந்தனா். இந்த நிலையில், திருப்பூா் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்ற போலீஸாா், அங்கு வந்த ரயில் ஏறி சோதனை நடத்தினா். அப்போது, ரயிலில் பயணித்த அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 1,250 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.