கோபியில் அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கோபி அருகே உள்ள எஸ்.பி. நகரைச் சோ்ந்தவா் நடராஜன் (76), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோபிக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். கரட்டூா் ஆா்ச் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த விஜயன் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், நடராஜன் வலதுபுறமாகத் தூக்கி வீசப்பட்டதில் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் நடராஜனின் தலை மோதி மீண்டும் தூக்கி வீசப்பட்டுள்ளாா்.இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் நடராஜனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டாா் என்று தெரிவித்தனா். பின்னா், அவரது உடலைக் கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.இந்த விபத்து குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.