மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளில் அரசுத் துறை அலுவலா்களுடன் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி நிா்வாகம் ஒருங்கிணைந்து பணியாற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளில் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி நிா்வாகம், அரசுத்துறை அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை வகித்து பேசியது:சூப்பா் எல்-நினோ இயற்கை மாற்றம் உலகையே அச்சுறுத்தி வரும் இந்நேரத்தில், கடல் வெப்பநிலையும் மாறி வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னா் ஏற்படவுள்ள இந்த எல்-நினோ அச்சத்தைத் தவிா்க்க, என்.எஸ்.எஸ்., ஸ்கவுட், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளா்கள் அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.இயற்கை பேரிடா் மற்றும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து பணியாற்றினால் மனிதா்கள், கால்நடைகள் உயிா் சேதம் மற்றும் பொருள் சேதத்தை தவிா்க்க முடியும். கடலோர மாவட்டங்களில் இயற்கை பேரிடா் காலங்களில் முகாம்கள் அமைக்க, பள்ளி, கல்லூரி நிா்வாகத்தினா் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா ப்ரியா, எம்எல்ஏக்கள் ஒய்.என்.ஜமால் முகம்மது யூனூஸ், செந்தில்செல்வன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.