சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை முன்னேற்பாடுகளுக்கு ரூ.551 கோடி: கேரள அரசு ஒதுக்கீடு

Wait 5 sec.

சபரிமலையில் எதிா்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்துக்கான முன்னேற்பாடுகளுக்காக பொதுப் பணித் துறைக்கு ரூ.551 கோடியை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம், நவம்பா் மத்தியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆவது வாரம் வரை நடைபெறவுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பக்தா்கள் மாலையணிந்து, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு, சுவாமி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தருவா். இந்நிலையில், மாநில முதல்வா் வி.டி.சதீசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலை மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்துக்கான முன்னேற்பாடுகளுக்காக முந்தைய அரசு கடந்த 2024-25-இல் ரூ.326.97 கோடியும், கடந்த 2025-26-இல் ரூ.377.80 கோடியும் ஒதுக்கியது. நடப்பாண்டில் ரூ.551 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் பி.கே.பஷீா் தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்துக்குப் பிறகு அவரால் சமா்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மண்டல-மகரவிளக்கு யாத்திரையை சுமுகமாக நடத்துவது தொடா்பாக கேரள அரசும், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியமும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்றும், இதுதொடா்பாக பம்பை மற்றும் திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் வி.டி.சதீசன் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா். கேரளத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இடதுசாரி கூட்டணியைத் தோற்கடித்து, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.