தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய்யை கண்டித்து, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (செப். 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது, மிசா குறித்துப் பேசும்போது, மு.க. ஸ்டாலினை சுட்டிக்காட்டுவதப்போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார்.இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், ”எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என்று முதல்வர் விஜய் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.இந்த நிலையில், திமுக சார்பில் முதல்வர் விஜய்யை கண்டித்து வருகின்ற செப். 12, சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:”திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து - குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி – போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி - அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் - தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று - அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் விஜய்.இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி மூலமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.கொலை - கொள்ளை அதிகமாகிவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் - பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டப்பேரவையை முதலமைச்சர் மாற்றி விட்டார்.திமுகவையும், ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர் கருணாநிதியையும் - இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா - MISA (Maintenance of Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த மு.க. ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டப்பேரவை கண்டிருக்காது.அவரது உரை மூலமாக சட்டப்பேரவையின் மாண்பு – மரபு - வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டப்பேரவையில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசப்பேரவையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.Controversial remarks about M.K. Stalin - DMK announces protest against Chief Minister Vijayசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய்