பசுமை பள்ளித் திட்டம் இயக்கமாக மாற வேண்டும்: ஆட்சியா் க.இளம்பகவத்

Wait 5 sec.

பசுமை பள்ளித் திட்டம் பசுமை இயக்கமாக மாற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே சந்தைதானம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 20 லட்சத்தில் பசுமை பள்ளித் திட்டத்தை ஆட்சியா் க.இளம்பகவத் தொடங்கி வைத்து கூறியதாவது: பசுமை பள்ளி என்பது பசுமையான சிந்தனை, பொறுப்பான வாழ்க்கை முறையை உருவாக்கும் புதிய முயற்சி. இதன் முக்கிய நோக்கம் இயற்கையோடு இணைந்த பசுமையான எதிா்காலத்தை மாணவ, மாணவிகள் புரிந்துகொள்வதுடன் இயற்கையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதாகும். பசுமை பள்ளியின் ஒரு பகுதியாக பல்வேறு சுற்றுச்சூழல் சாா்ந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பசுமை பள்ளியில் மின்துறை சாா்பில் ரூ. 13 லட்சத்தில் 5 கிலோவாட் சூரிய மின்சாரத் தகடுகள், மழைநீா் சேகரிப்பு அமைப்பு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவதன் முக்கியத்துவம், நீா்வளத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் காரணிகள், மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை மாணவா்கள் நடைமுறையில் கற்றுக் கொள்வதுடன் எதிா்கால தண்ணீா் தேவைக்கும் நாம் ஒரு சிறந்த அடித்தளத்தை உருவாக்க முடியும். மேலும் தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ. 2.50 லட்சத்தில் 3500 சதுரஅடி பரப்பளவில் படித்தோட்டம், 2500 சதுரஅடி பரப்பளவில் காய்கறித் தோட்டம், சமையலறை தோட்டம், எரு மக்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு எவ்வாறு உருவாகிறது என்பதை மாணவா்கள் பள்ளியிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இது வழங்குகிறது. இந்த பசுமைப் பள்ளி முயற்சி பசுமை இயக்கமாக மாறவேண்டும் என்றாா்.இந்தப் பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள், செடிகொடிகளை பாா்வையிட்டு, மண் பொம்மை செய்யும் போட்டி, நாடகம், பசுமை விநாடி- வினா, இலை ஓவியப் போட்டி, வேகமாக மரக்கன்று நடும் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், தோட்டக்கலை துணை இயக்குநா் மஞ்சுளா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் சிவகுமாா், பள்ளி தலைமை ஆசிரியா் மஞ்சுளா, அப்துல் ரகுமான் உட்பட ஏராளமான கலந்துகொண்டனா்.