பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) என்பது இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல; பயணத்துக்கானது மட்டுமே என்று வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.”வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, பாஸ்போர்ட் வைத்திருப்பவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தினாலும், அது உங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் கிடையாது" என்று நேற்று நடைபெற்ற 14-வது கடவுச்சீட்டு சேவை நாள் நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இந்திய குடியுரிமையை அங்கீகரிப்பதாக இதுவரை நம்பி வந்த நிலையில், சட்டப்படி அத்தகைய அங்கீகாரத்தை அது அளிக்கவில்லை என்று தற்போது அதிகாரி ஒருவரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பாஸ்போர்ட் என்பது பயண ஆவணம் மட்டுமே என்றும், அதை இந்திய குடியுரிமைக்கான சான்றாகக் கருத முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரியே கூறியிருப்பதுதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.மேலும் இந்தியக் குடிமக்களுக்கான நலத்திட்டங்களைப் பெறுவதற்கான உரிமையை அது அளிக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.முன்னதாக, ஆதார் அட்டையும் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என கூறப்பட்ட நிலையில், கடவுச்சீட்டும் இந்தியக் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என கூறியிருப்பது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று கூறப்படும் நிலையில், அப்படி என்றால் எதுதான் ஆதாரம் என்று பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.