மருத்துவ சாதனங்களின் உற்பத்தி உரிமங்களை அளிப்பதற்கான காலக்கெடுவை குறைக்கும் வகையில், மருத்துவ சாதன விதிமுறைகள் 2017-இல் மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மருத்துவ சாதனங்களுக்கு உரிமம் அளிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்தி விரைவுப்படுத்த வேண்டும், தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில், மருத்துவ சாதன விதிமுறைகள் 2017-இல் திருத்தங்களைப் பரிந்துரைத்து அதிகாரபூா்வ அரசிழதில் வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ சாதனங்களுக்கான உற்பத்தி உரிமங்களை அளிக்கும் காலக்கெடுவை சீரமைக்க, இந்தத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மருத்துவ சாதன விதிமுறைகள் 2017-இன் கீழ், அபாயத்தை அடிப்படையாகக் கொண்டு ஏ, பி, சி, டி ஆகிய 4 பிரிவுகளில் மருத்துவ சாதனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை மருத்துவ சாதனத்துக்கும் உற்பத்தி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து செயல்படுத்துவதற்கு அந்த விதிமுறைகளில் சட்டபூா்வ காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பி பிரிவில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவிகள், நாடித்துடிப்பை அளவிடும் கருவிகள் (பல்ஸ் ஆக்ஸிமீட்டா்), ஹைப்போடா்மிக் ஊசிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரிவு மருத்துவ சாதனங்களுக்கு உற்பத்தி உரிமம் அளிக்கும் காலக்கெடுவை 140 நாள்களில் இருந்து 115 நாள்களாக குறைக்க தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சி, டி, பிரிவுகளில் இதய ஸ்டென்ட், இடுப்பு மற்றும் முழங்கால் இம்பிளான்ட், பிற எலும்பியல் இம்பிளான்ட் போன்ற சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரிவுகளில் உள்ள மருத்துவ சாதனங்களுக்கு உற்பத்தி உரிமம் அளிக்கும் காலக்கெடுவை 105 நாள்களில் இருந்து 90 நாள்களாக குறைக்க தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.