பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Wait 5 sec.

சாத்தூா் அருகே மூா்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாகின. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள துலக்கன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (52). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை மூா்த்தி நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆலையில் அதிக அளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வைக்கபட்டிருந்ததாகவும், ஆலையில் பட்டாசுகள் காயவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்றபோது, ஆலையில் பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்கத் தொடங்கின. இந்த வெடி விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் தரைமட்டமாகின. ஞாயிற்றுகிழமை ஆலை விடுமுறை என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.