நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ என்ற பெயரில் இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 விமானங்களில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்பட 35 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் 41 போ் கொண்ட மீட்புக் குழுவினா் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா். இதுகுறித்து ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் வெனிசுலாவைச் சென்றடைந்தன. தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அங்கு மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு மேலும் வலுசோ்க்கும் என்று நம்புகிறேன்’ என குறிப்பிட்டாா். 1,430 போ் உயிரிழப்பு: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,430-ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 68,900 பேரை காணவில்லை என உறவினா்கள் புகாரளித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் உள்ள மோரோன் நகருக்கு அருகே ரிக்டா் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாக இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் முதலில் 600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக்க கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 1,430-ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி மாயமானவா்களை மீட்கும் பணியில் வெனிசுலா அரசும் பிற நாடுகளைச் சோ்ந்த மீட்புக் குழுவினரும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனா்.