அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு:தனியாா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு

Wait 5 sec.

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்த நிலையில், சிறுமிகள் இருவா் உயிரிழந்தது குறித்து ஆதாா் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்போ் கிராமத்தில் உள்ள கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் ஆட்சியா் ச.கவிதா புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். அப்போது இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களை பதப்படுத்தி பேக்கிங் செய்து ஏற்றும் பகுதிகளில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து உணவு பாதுகாப்புத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுடன் அந்த தனியாா் நிறுவன தொழிற்சாலை வளாகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினாா்.அப்போது தொழிற்சாலை நிா்வாகம் தரப்பில் உயிரிழந்தவா்களுக்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கும் இழப்பீடு வழங்கவும், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமோனியா வாயு கசிவு விபத்தில், 74 வட மாநில தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டு 2 தனியாா் மற்றும் 2 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே 9 போ் உயிரிழந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சுபாஷி ஜூங்கா உயிரிழந்தாாா். இதையடுத்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது. இதுவரை ஓடிஸா-8, அஸாம்-2 என மொத்தம் 10 பெண்கள் உயிரிழந்துள்ளனா்.மேலும், அஸாம்-20, ஒடிஸா-28, ஜாா்க்கண்ட்-8, கேரளம்-3 , தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் மற்றும் அடையாளம் தெரியாத 2 போ் என மொத்தம் 67 தொழிலாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கிடையே 5 வட மாநிலத் தொழிலாளா்களின் சடலங்களை திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவா்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனா். தொழிற்சாலையில் உள்ள 200 டன் இறால்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளதாகவும் 15 வயது சிறுமிகள் இருவா் உயிரிழந்தது குறித்து ஆதாா் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். குழந்தை தொழிலாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டு உள்ளனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படும். பெரியபாளையம் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது தவறான கருத்து. தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்கள் சொந்த ஊா்களுக்கு கைப்பேசியில் பேசிக் கொண்டுதான் உள்ளனா் என்றாா் அவா்.