பத்தாம் வகுப்புக்குப் பிறகு பிளஸ் 1 வகுப்பில் தேர்வு செய்கின்ற பாடப்பிரிவு என்பது மாணவர்களின் எதிர்கால கல்விக்கான முக்கியமான தருணம் ஆகும். அதன் பிறகு பிளஸ் 2 வகுப்பை நிறைவு செய்துவிட்டால் எதிர்கால கல்வியை நோக்கிய பயணம் தொடங்குகிறது எனலாம். தற்போது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி பயில்வதற்கு நுழைவுத் தேர்வுகளை எழுதுவது கட்டாயம் ஆகிவிட்டது. மாணவர்களின் திறனை வளர்த்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் இந்த நுழைவுத் தேர்வுகள் ஒரு தூண்டலாய் அமைந்துள்ளன என்றால் அது மிகையல்ல.பிளஸ் 2 வகுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டடக்கலை, ஆடைகள், காலணிகள் வடிவமைப்பு பற்றிய படிப்புகள், அழகு சாதனப் பொருள்கள் , ஆபரணங்கள் வடிவமைப்பு பற்றிய படிப்புகள், கடல் சார்ந்த படிப்புகள், மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல், வணிகவியல், குற்றவியல், சமூக அறிவியல், தடய அறிவியல், சைபர் செக்கியூரிட்டி எனப்படும் இணைய வழி பாதுகாப்பு தொடர்பான படிப்புகள் ஆகியவற்றைப் படித்திட நுழைவுத் தேர்வு அவசியமாகிறது.மேலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலேயே பொறியியல், சட்டம், உணவக மேலாண்மை, பேசுதல் மற்றும் கேட்டல், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்பு, மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் படிப்புகள் போன்றவற்றைப் படிக்கவும் நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். நுழைவுத் தேர்வுகளைப் பொறுத்தளவில் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கத் தொடங்குகிறபோதே தேவையான மாதிரி வினாக்கள் பயிற்சியினையும் பாடப்புத்தகங்கள் படிப்பதனையும் முறையாக மேற்கொள்வதன் மூலமும் சரியான திட்டமிடல் மூலமும் நிச்சயமாக வெற்றி பெறலாம்.நீட் தேர்வில் வெற்றி பெற 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் இயற்பியல் ,வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் கடந்த 20 ஆண்டுகளில் நீட் கேட்கப்பட்ட முந்தைய தேர்வு வினாக்களை நாள்தோறும் பயிற்சி செய்ய வேண்டும்.ஜேஇஇ முதன்மை மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமும் கடந்த 20 ஆண்டுகளில் ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ்டு தேர்வில் கேட்கப்பட்ட முந்தைய தேர்வு வினாக்களை நாள்தோறும் பயிற்சி செய்ய வேண்டும்.இதேபோல சட்டம், சமூகவியல், தடயவியல், சிஏ, வணிகவியல் போன்ற படிப்புகளுக்காக அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற அத்தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் பாடநூல்களையும் முந்தைய தேர்வு வினாக்களையும் தேர்வு செய்து இரண்டு ஆண்டுகள் அதாவது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற போதே கவனமுடனும் நேர்த்தியுடனும் படித்து வந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.மேலும் வழிகாட்டுதலை விரும்புகின்ற மாணவர்கள் இவை போன்ற நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு ஏதுவாக ஐஐடி கான்பூர் துணையோடு இயங்கும் இணையதளத்தில் மாதிரி வினாக்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் போதுமான அளவிற்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் கட்டணமின்றி பயன்படுத்திட முடியும் என்பது கூடுதல் சிறப்பு. நம்பிக்கையோடு படித்தால் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பெறுவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி நிச்சயம். When should one start preparing for entrance exams?