ஏமாறாதே... ஏமாற்றாதே... அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - திரை விமர்சனம்!

Wait 5 sec.

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான கான் சிட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆரம்பமாக மங்களூரில் ஹோட்டல் தொழிலைச் செய்து வரும் குடும்பம் காட்டப்படுகிறது. கணவன் மனைவியாக அர்ஜுன் தாஸ், அன்னா பென், அன்னா பென்னின் அம்மா, அண்ணனாக வடிவுக்கரசி, யோகி பாபு, மகனாக சற்கர நாற்காலி உதவியால் பள்ளி செல்லும் மகன் என ஆர்ப்பாட்டமில்லாத உறுப்பினர்கள்தான். ஆனால், சில காட்சிகள் கடந்ததும் அர்ஜுன் தாஸின் மகன் கடத்தப்படுகிறான். 2017-லிருந்து 2010-க்கு கதை பின்னோக்கிச் சென்னைக்குச் செல்கிறது. இவர்கள் சாதாரண குடும்பம் இல்லையென்பதும் ஒவ்வொருவரும் பெரிய மோசடி பேர்வழிகள் என்பதும் தெரிய வருகிறது. உண்மையில், அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் யார்? அந்த சிறுவன் எதற்காகக் கடத்தப்படுகிறான்? என்கிற கேள்விகளே மீதக்கதை. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இப்படத்தை இயக்கியதுடன் தயாரிக்கவும் செய்துள்ளார். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் வகை என்பதால் ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பார்க்கப்படும் சுவாரஸ்யம் இதில் நன்றாக எழுதப்பட்டுள்ளது. கவனமாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை என்பதால் சில காட்சிகள் நல்ல கைதட்டல்களையும் பெறுகின்றன. முக்கியமாக, நடிகர் அர்ஜுன் தாஸ் பணியாற்றும் மின்வாரிய அலுவலகத்தில் அவருக்கும் விடிவி கணேஷுக்கும் இடையான காட்சிகளும் அம்மா மகனாக வரும் வடிவுக்கரசி, யோகி பாபுவுக்கான காட்சிகளும் சிரிப்பை வரவழைக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவையாகவே செல்லும் த்ரில்லர் கதை என்பதால் பல காட்சிகள் கைகொடுத்துள்ளன. சினிமாவில் நடிக்க ஆசைப்படும் யோகி பாபு, மின்வாரிய ஊழியராக இருந்து மக்களின் மின்சாரக் கட்டணங்களை பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் அர்ஜுன் தாஸ், வாடகைக்கு வீடுகளை எடுத்து லீஸுக்கு விட்டு மோசடி செய்யும் அன்னா பென் என ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களும் சுவாரஸ்யமான முறையில் எழுதப்பட்டுள்ளதால் கதையாக எங்கும் தொய்வில்லாமலே படம் செல்கிறது. ஆனால், மென்மையாக சிரிப்பு வரும் காட்சிகளை இன்னும் சிறப்பாக எழுதியிருந்தால் வெடித்துச் சிரிக்கும் காமெடிகளாக அவை மாறியிருக்கும். இடைவேளைக் காட்சியும் கிளைமேஸும் சரியான வரவேற்பைப் பெற்றால் கவனம் பெற்ற படமாக மாறலாம். நடிகர் அர்ஜுன் தாஸுக்கு அவரின் கடந்த படங்களை ஒப்பிட இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படமாகவே அமைந்துள்ளது.நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகள் நீண்ட காலம் கழித்து சிரிக்கவும் வைக்கிறது. காவல்துறை அதிகாரியாக நடித்தவர், அர்ஜுன் தாஸின் நண்பராக வரும் சதா கதாபாத்திரம், சிறுவனாக நடித்த பையன் ஆகியோரும் அவரவருக்கான காட்சிகளைக் கச்சிதமாக பயன்படுத்தியுள்ளனர். இசையமைப்பாளர் சான் ரோல்டனின் பின்னணி இசைகள் சஸ்பென்ஸ் காட்சிகளுக்கான எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்துள்ளன. உருவாக்க ரீதியாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் அருண் மோசஸின் எடிட்டிங்கும் வீட்டிற்குள், அலுவலகத்திற்குள் திரும்பத் திரும்ப நடக்கும் காட்சிகளை சோர்வடையாமல் பார்க்க வைக்கின்றன. ஏமாறாதே, ஏமாற்றாதே என்கிற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் உணர்வுப்பூர்வமாக மாறவில்லை. மாறாக, இந்த நால்வரும் தங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் என்னவெல்லாம் செய்ய விழைகிறார்கள் என்பதாகவே கதை முடிந்துவிட்டது. எமோஷன் பக்கத்தை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம். இருப்பினும், ரசிக்கக்கூடிய வகையான படமாக திரைக்கு வந்திருக்கிறது!பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம் The movie Con City, starring actor Arjun Das, has been released in theaters today.