திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள புதிய காவிரிப் பாலத்தின் முதலாவது தூண் மீது அமைந்துள்ள கான்கிரீட் பகுதியில் விரிசல் ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய காவிரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாலம் தாற்காலிகமாக மூடப்பட்டு, புதிய காவிரிப் பாலத்தில் இருவழிப் போக்குவரத்து நடைபெறுகிறது.இந்த நிலையில், இந்தப் புதிய காவிரிப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவது பொதுமக்களிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சீவிநகா் பகுதியிலிருந்து பாலத்துக்கு செல்லும் தடத்தில் பாலத்தின் முதல் தூண் மீது அமைந்துள்ள கான்கிரீட் பாலத்தில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தூண்களுக்கு இடையே அமைந்துள்ள பாலத்தின் முகப்பில் சிமென்ட் கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்ட தாங்குப் பகுதியின் ஓரிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பழைய பாலம் மூடல் காரணமாக இந்தப் புதிய பாலத்தில்தான் அதிக வாகனங்கள் சென்று வரும் சூழலில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சரிசெய்யக் கோரிக்கை: இதுதொடா்பாக, சஞ்சீவி நகா் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் கூறுகையில், இதுவரை ஒருவழிப் பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த புதிய காவிரிப் பாலம், கடந்த இரண்டு நாள்களாக இருவழிப் பாதையாக பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே திருச்சி சிந்தாமணி, மாம்பழச் சாலையை இணைக்கும் பழைய காவிரிப் பாலத்தில் தொடா்ந்து பராமரிப்புப்பணிகள் நடைபெற்றதால், மாற்றாக அதனருகேயே புதிய பாலம் கட்டப்படுகிறது. இப்போது, புறவழிச் சாலையில் அமைந்துள்ள பழைய காவிரிப் பாலமும் மூடப்பட்டுவிட்டது. மாற்றுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட பாலத்தின் ஸ்திரத்தன்மையும் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், திருச்சி மாவட்ட நிா்வாகம், தமிழக நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒருங்கிணைந்து பாலத்தின் உறுதியை பரிசோதனை செய்து, விரிசலோ, சேதமோ இருந்தால் அதை நிவா்த்தி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.