நடிகர் ஆர்யா, நிகிலா விமல், இந்திரன், சுனில் என பலரும் நடித்து இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் அனந்தன் காடு. இறுதிக் காட்சியில் இருந்து தொடங்குகிறது கதை. கோவாவில் தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் வில்லன் சுனிலை இளைஞர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர். அவர்களுக்கும், சுனிலுக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் சுனிலை மிரட்ட வேண்டும்? என நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே கதை நகர ஆரம்பிக்கிறது. 1989ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர் மற்றும் வன்முறையில் தனது குடும்பத்தை இழந்த ஆர்யா தப்பிப் பிழைத்து இந்தியாவில் தஞ்சமடைகிறார். இங்கு அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திரன்ஸ் தலைமையிலான கூலிப்படையில் இணைகிறார். கேரள முதல்வருக்கு கூலிப்படையாக இயங்கும் இந்திரன்ஸ் அணி அவருக்காக பல்வேறு அடிதடி, கொலை சம்பவங்களை அரங்கேற்றுகிறது. இவர்களுடன் இணைந்த ஆர்யா என்ன ஆனார்? இந்திரன் மற்றும் அவரது குழு என்ன ஆனது? என்பதே அனந்தன் காடு திரப்படத்தின் கதை. அரசியல் பழிவாங்கல், நயவஞ்சகம், அதிகாரப்போட்டி என கதை பல்வேறு பரிமாணங்களுக்குள் விரிகிறது. படத்திற்கு பலமாக ஆர்யாவின் நடிப்பு அமைந்திருக்கிறது. குடும்பத்தை இழந்த இலங்கை தமிழராக ஆக்ரோஷமாக வந்துள்ளார் ஆர்யா. கூலிப்படையிடம் இணைந்தாலும் போராளிக்குண்டான குணாதியசங்களுடன் அவர்போடும் சண்டைகள் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை கடத்துகின்றன. எப்போதும் அப்பாவியான கதாபாத்திரத்தில் வரும் இந்திரன் இதில் வழக்கத்திற்கு மாறான அதிரடி கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.இவருடன் வரும் முரளி கோபி, அக்ஷய்குமார், தேவ்மோகன், போஸ்வெங்கட் என பலரும் நன்றாக நடித்துள்ளனர். சுனிலின் வில்லத்தனம் படத்திற்கு உயிரூட்டியுள்ளது. எனினும் நிகிலா விமல், ரெஜினா போன்றோரின் கதாபாத்திரங்கள் எதற்காக சொருகப்பட்டுள்ளது என்பது இயக்குநருக்கே வெளிச்சம். விறுவிறுப்பாக நகர்ந்தாலும் தெளிவற்ற திரைக்கதை பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திடீரென மாறும் காட்சிகள், இணைப்புகளற்ற முன்பின் காட்சி அமைப்புகள், அரசியல் குறைகள் படத்தை பின்னுக்கு இழுக்கின்றன. படம் முழுக்க தொடரும் லாஜிக் கேள்விகள் சீட்டிலிருந்து நம்மை நெளியச் செய்கின்றன. ஒரு பக்கம் ரெளடித்தனம், மறுபக்கம் அதனுடனே புரட்சி வசனங்கள் என சம்பந்தமற்ற காட்சிகள் குழப்பத்திற்கு இட்டுச் செல்வதை தவிர்க்க முடியவில்லை. தொய்வில்லாத திரைக்கதை அமைக்க மெனக்கெட்ட அதே மாத்திரத்தில் தெளிவான வகையில் காட்சி அமைப்புகளை நிறுவியிருக்க வேண்டியதில் தவறியிருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா கண்கள் படத்தை கச்சிதமாக பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது. தொழில்நுட்ப அம்சங்கள், மெனக்கெடலான நடிப்பு என அனைத்தும் இருந்தும் தெளிவற்ற திரைக்கதையால் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயற்சிக்கிறது அனந்தன் காடு.தாயைப் போல பிள்ளை! ஆனால்... பாலன் தி பாய் திரை விமர்சனம்!Ananthan Kaadu Film Review