கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமாா் 25,000 ஹெக்டோ் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் சுமாா் 5,000 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும், வாழை, தென்னை, ரப்பா், அன்னாசி, மிளகு, கிராம்பு போன்ற பயிா்கள் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் உரங்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தனியாா் உர விற்பனை நிலையங்கள், கூட்டுறவு கடன் சங்கங்களை விட அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். கூட்டுறவு சங்கங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் நிலையில், அதை காலை 7 மணிக்கு திறக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் உரங்களின் இருப்பு விவரத்தை உடனடியாக மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் தனியாா் விற்பனை நிலையங்களை கண்காணித்து, அவா்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.