தூத்துக்குடி, ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீா் ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி, முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளா்களில் சிலரை பணி நீக்கம் செய்யவும், சிலரை பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிட்டாா். தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் 9 அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், சில அம்மா உணவகங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, அம்மா உணவகத்துக்கு உணவு சாப்பிட வரும் மக்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில்தான் உணவு வழங்க வேண்டும். ஆனால், அங்கு முழுமையாக டோக்கன் வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் மொத்தமாக வெளியே விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, அம்மா உணவகத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனா். அப்போது 5 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் பணியாளா்களில், புகாா்களுக்கு உள்ளான பணியாளா்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மற்ற பணியாளா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மேயா் உத்தரவிட்டாா்.